கொக்கோ கோலா குடிப்பதற்கும் எடை கூடுவது அல்லது மிகப்பருமனான உடலுக்குமுள்ள சம்பந்தம் என்ன?

பல குழுக்களின் வாதங்களைக் கேட்கும்போது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. கொக்கோ கோலா கம்பெனி, கொக்கோ கோலா குடிப்பதற்கும் உடல் எடை கூடுவதற்கும் விஞ்ஞான அடிப்படையில் எந்த ஆதாரமும் கிடையாது என்று கூறுகிறது. ஆனால் வேதியியல் வல்லுநர்கள் மற்றும் உணவுமுறை வல்லுநர்கள் செயற்கை இனிப்பால் உடலில் இன்சுலின் வெளியாவதை ஏற்றுக் கொள்கிறார்கள்.


இந்த செயற்கை இனிப்பு வருகிறது என்ற அறிவிப்பால், இன்சுலின் இரத்தத்தில் கொட்டப்படுகிறது. ஆனால் சர்க்கரை வருவதில்லை. வேலையில்லாத இன்சுலின் உடம்பில் தேவையான அளவில் இருக்கும் சர்க்கரையின் அளவை இன்னும் கீழே கொண்டு போகிறது. அதன் காரணமாக கடும் பசி உண்டாகிறது. அதிகம் சாப்பிடுவதால் எடை கூடுகிறது.

எங்களுடைய பார்வையிலிருந்த அதிகமாக கொக்கோ கோலா குடித்த சக ஊழியர்களின் இரத்த சர்க்கரை அளவு 80 மி.கிக்குக் கீழே வந்தால், அவர்கள் எப்போதும் சாப்பிடுவதை விட கூடுதலாகச் சாப்பிட்டார்கள். நமது உடம்பில் உண்டாகும் இன்சுலினை மறையச் செய்ய வேறு எந்த வழியும் இல்லை.

வயிற்றுப் போக்கை நிறுத்த கொக்கோ கோலா பயன்படுகிறதா?
வயிற்றுப் போக்கை நிறுத்த ஜெர்மனியில் சொல்லும் பாட்டி வைத்தியம், கொக்கோ கோலாவும், சால்ஸ்டாங்கன் (Salzstangen) என்னும் கோதுமை மாவில் செய்யப்பட்ட, சேவு போன்ற உப்புக்கட்டிகள் கலந்த நொறுக்குத் தீனியும்தான். ஏனென்றால் இதன் மூலம் உப்பும், இனிப்பும், திரவமும் கிடைப்பதால் சரியென்றே தோன்றுகிறது. ஆனால், இங்கு இனிப்பு மிகவும் கூடி, உப்பின் அளவு குறைவாக இருப்பதால் இது வயிற்றுப் போக்கை மேலும் தீவிரமாக்குகிறது.

என்னிடம் வந்து ஆலோசனை கேட்போர், இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், நாங்கள் வயிற்றுப் போக்கை நிறுத்துவதற்கு என்னதான் செய்வது? என்று கேட்பர். கொதித்து ஆற வைக்கப்பட்ட ஒரு தம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்பையும், 5 டீஸ்பூன் குளுக்கோஸும் கலந்து குடிக்கச் சொல்வேன். இதுவே சிறந்த மருந்து.

இதனால் குணமாகாவிட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். ஏனென்றால், பாக்டீரியாகவும் இருக்கலாம்.

மென்டோஸ் பொங்கி வருதல் என்றால் என்ன?
லைட் கொக்கோ கோலாவில் பெப்பர்மிண்ட் மிட்டாயைக் கலந்தால் நீரூற்று போலப் பொங்கி வரும். அதுவே மென்டோஸ் பொங்கி வருதல் என்பது. கொக்கோ கோலாவிலுள்ள காஃபீன், அஸ்பார்டேம், பொட்டாசியம் பென்ஸோவேட், கார்பன்டைஆக்ஸைடு, கம்அராபிக், ஜெலாட்டின் ஆகியவை இந்த மென்டோஸ் பொங்கி வருதலை உண்டாக்குகின்றன. இப்படி ஒரு செயல் நமது உடம்புக்குள் ஏற்பட்டால், நிறைய கார்பன்டைஆக்ஸைடு உண்டாகி உடலுறுப்புகளை சேதமடையச் செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால் கொக்கோ கோலா கம்பெனி இதை பெப்பர்மின்ட்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று உத்திரவாதம் கொடுக்கிறது.

மற்ற மென்குடிபானங்களுக்கும் இப்படிப்பட்ட தன்மை உண்டு.

கொக்கோ கோலா விந்துக்களைக் கொன்று கருத்தடைக்கு உதவி செய்யுமா?
இது முற்றிலும் தவறு. உடலுறவு முடிந்தவுடன் பெண்கள் கொக்கோ கோலாவினால் பெண்குறியைக் கழுவினால் விந்துக்களைக் கொல்ல முடியாது. இதை ஆதரித்து இணையதளத்திலும் கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. இது முற்றிலும் மூடநம்பிக்கையாகும். மேலும் கொக்கோ கோலாவிலுள்ள இனிப்பு ஈஸ்ட் தொத்துநோயை உண்டாக்கலாம். இதைக் குணப்படுத்துவது மிகவும் கஷ்டம்.

இது ஆப்ரிக்காவில் வெற்றிகரமாக நடக்கிறதென்றால் அதைப் பயன்படுத்தும் நபரின் அதிர்ஷ்டம்தான். இதற்கும் கொக்கோ கோலாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏனென்றால், விந்துக்கள் முன்பே வேகமாகச் சென்றுவிடுகின்றன. உங்களுக்கு துர்அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் முதல் முறையிலேயே, உடனடியாகக் கர்ப்பம் தரித்து விடுவீர்கள். கர்ப்பத்தைத் தடுக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.


E211 என்றால் என்ன? இது ஆபத்தானதா?
இது ஒரு உணவுச் சேர்மானப் பொருள். E211 அல்லது சோடியம் பென்ஸோவேட் குழந்தைகளின் மிகை இயக்கத்துக்கும, டிஎன்எ (DNA) சேதத்துக்கும் காரணமாகிறது என்று விவாதிக்கப்படுகிறது. கொக்கோ கோலாவும் இதை ஒத்துக்கொண்டு, அதற்குப் பதிலாக பாதுகப்பான சேர்மானப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இதை மாற்றி விடுவதாகத் தெரிவித்துள்ளது. பல மென்குடிபானங்களிலும் சோடியம் பென்ஸோவேட் இருக்கிறது. இது பாட்டிலின் டேபிளில் எழுதப் படுவதில்லை.

கேரளாவுக்கும் கொக்கோ கோலாவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஜெர்மனி போன்ற நாடுகளில் 3000 மீ ஆழத்திலிருந்து எடுக்கும் தண்ணீரில் கூட மிகவும் குறைந்த அளவில் பூச்சிக் கொல்லிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவது தொழிற்சாலைகளின் பொறுப்பு. இதற்கான தொழில் நுட்ப வசதிகள், ஃபில்டர்கள் இருக்கின்றன. தவறான இடத்தில் பணத்தை மிச்சப் படுத்துவதுதான் பூச்சிக் கொல்லிகளால் அசுத்தப் படுத்தப்பட்ட தண்ணீருக்குக் காரணம்.

நமது இந்திய அரசு, மென்குடிபானங்களில் உள்ள பூச்சிக் கொல்லி அளவுகளை நிர்ணயிக்க ஒரு குழுவை ஏற்படுத்துயுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

இவ்வளவு தகவல்களைச் சொன்னீர்கள், உங்களுடைய ஆலோசனைதான் என்ன?
உங்கள் உடம்பிலுள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதற்கு தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 70% குடிதண்ணீராக இருக்கவேண்டும். காப்பி, தேனீர், பழச்சாறுகள் அதிகபட்சம் 2 தம்ளர் குடிக்கலாம். புதிய பழச்சாறுகள் மிகவும் நல்லது. இளநீரும் மிகவும் நல்லது.

கொக்கோ கோலா அல்லது மற்ற மென்பானங்களை எப்பொழுதாவது ஒரு தம்ளர் குடிக்கலாம்.