கேட்டமைன் என்ற பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதை வேறு ஊர்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ கடத்த முயன்றதாகப் பலர் காவல்துறையிடம் பிடிபட்டதை நான் தொடர்ந்து செய்தித்தாள்களில் பார்க்கிறேன். இந்த அருவருப்பான வியாபாரம் நடக்கும் முக்கியமான இடங்களில் சென்னையும் ஒன்று.

முப்பது வருடங்க்களுக்கு மேலாக கேட்டமைன் கால்நடைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த இருபது ஆண்டு காலமாக இதனுடைய தீய பயன்களையும் போதைத் தன்மையையும் பற்றி அறிவோம். இது ஒரு மயக்க மருந்து மற்றும் வலியைப்போக்கும் மருந்து. இது பிசிபி (PCP) போன்ற போதையை உண்டாக்கும் கால்நடை மருந்து. கேட்டமைனும் பிசிபியும் வட அமேரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் தவறாக உபயோகப்படுத்தப்படும் போதைப்பொருட்கள். ஆனால், ஐரோப்பாவில் இதை ஒருவரும் துஷ்பிரயோகம் செய்வதில்லை. பொதுவாக இதன் போதைக்கு அடிமையாவது இளம் பெண்களும் ஆண்களும்தான்.

தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்தால் மனதளவில் கேட்டமைனுக்கு அடிமையாவோம். இந்த துஷ்பிரயோகத்தால் உண்டாகும் விளைவுகள்:

• மாயத்தோற்றம்
• நினைவுக் குறைபாடு
• மனக்குழப்பம்
• குமட்டல்
• தூக்கத்தில் நடப்பது போன்ற உணர்வு

கேட்டமைனின் பக்கவிளைவுகள்:

• மனக்குழப்பம்
• மிகுந்த இரத்த அழுத்தம்
• அதிக இதயத்துடிப்பு
• நிலையற்ற கவனம்
• உடலின் பாகங்கள் மரத்துப் போதல்
• உடலுக்கு வெளியே சென்று உலாவி வந்த மனநிலை

கேட்டமைனுக்கு ஹெராயின் போன்ற விளைவுகள் கிடையாது. இதற்கு அடிமைப்படுவது கொகெய்னுக்கு அடிமைப்படுவது போன்றது.

கேட்டமைனை மட்டும் துஷ்பிரயோகம் செய்து இறப்பது மிகவும் அபூர்வமானது. ஆனால் மற்ற போதைப்பொருட்கள், மது அல்லது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துகளோடு சேர்த்துத் துஷ்பிரயோகம் செய்தால் மரணம் நேரிடலாம்.

போதைப்பொருட்கள் உங்களை மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தையும் அழிக்கும். நாம் எல்லோரும் எப்பொழுதும் வேண்டாம் என்றுதான் சொல்ல வேண்டும்.