இன்று தேங்காய் உலகின் பல பகுதிகளில் விளைகிறது என்றாலும் முதலில் தோன்றிய இடம் நமது இந்தியத் துணைக் கண்டம் தான். அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். நமது உடல் நலத்துக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் தன்னகத்தே கொண்ட சிறந்த உணவுப் பொருள் தேங்காய். தென்னை மரத்தின் ஒவ்வோர் அங்கமும் மனிதர்களுக்குப் பயன்படுகிறது.

தேங்காய் நமது நாட்டுப் பாரம்பரிய மருந்துகளிலும், நவீன மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காயை வைத்து 50க்கும் மேலான பயன்பாடுகள் இருக்கின்றன என்று கட்டுரைகள் தெரிவிக்கின்றன. அந்த முறையில் தேங்காய் இன்னும் பயன்படுத்தப்ப்ட்டு வருகிறது.

தேங்காய் மிகவும் நல்ல உணவு. நாம் எல்லோரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதற்கான காரணங்கள்:

• 9% நார்ச்சத்து உள்ளது
• அதிக அளவில் செலினியம் இருக்கிறது. நம் உடலில் உள்ள ஆபத்தான ஃப்ரி ரேடிக்கல்களைக் குறைக்கும் என்ஸைம்களில் செலினியம் இருக்கிறது. மேலும் பாதரசம் உட்பட்ட நச்சு மிகுந்த உலோகங்களை நம் உடம்பிலிருந்து நீக்கவும் செலினியம் உதவி செய்கிறது.
• பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம், அயோடின் மற்றும் பல முக்கிய உலோகச்சதுக்களும் தேங்காயில் இருக்கின்றன.
• பி குடும்ப வைட்டமின்கள், இ, சி வைட்டமின்களும் இருக்கின்றன.
• தேங்காயில் அதிக நீளமுள்ள பூரிதக் கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே உள்ளன. ஆனால், ஆரோக்கியமான குறைந்த பூரிதக் கொழுப்பு அமிலங்களும் நடுத்தர நீளமுள்ள பூரிதக் கொழுப்பு அமிலங்களும் அதிகமாக உள்ளன. எனவே எல்டிஎல் : எச்டிஎல் விகிதமும் நன்றாக இருப்பதற்கு தேங்காய் மிகவும் ஏற்ற உணவுப்பொருள்.

இட்லிக்கோ மெதுவடைக்கோ 30 கி தேங்காய் சட்னி சாப்பிட்டால் இருதய வியாதி உள்ளவர்களுக்கும் கூட எந்தத் தீங்கும் எற்படாது. வேறு ஏதேனும் சமைத்தால் கூட அதில் சாதாரண அளவு தேங்காயைச் சேர்த்துக்கொள்ளலாம். எல்லாச் சமையல்களிலும் தாராளமாகத் தண்ணீர் சேர்க்கிறோம். அப்படிச் சமைத்துச் சாப்பிடும்போது, அதிக நீளமுள்ள பூரிதக் கொழுப்பு அமிலங்களை நாம் ஒரு சில கிராம்கள் அளவுக்குத்தான் உட்கொள்கிறோம். அதிக நீளமுள்ள பூரிதக் கொழுப்பு அமிலங்களும் நமது உடல் நலத்திற்குத் தேவையானதே.

பல ஆண்டுகளாகவே உணவில் தேங்காய் சேர்க்காத, இருதய நோய் வந்த பலரை இந்தியாவில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், வேடிக்கை என்ன தெரியுமா? அவர்கள் கொலஸ்ட்ரால் மற்றும் விலங்கு பூரிதக் கொழுப்பு அமிலங்கள் உள்ள இறைச்சி மற்றும் கோழிக்கறியையும் தாராளமகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறனர். இந்த நிலையில் அவர்களுக்குத் தேங்காய் மட்டுமே ஏன் வில்லனாகத் தெரிகிறது என்பது எனக்குப் புரியவில்லை?

கவனித்துச் சாப்பிட வேண்டுமென்றல், சமையலில் தேங்காய் எண்ணெய் மற்றும் இதர தாவர எண்ணைகளின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தூய தேங்காய் எண்ணெய் நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது என்றும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது என்றும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன என்பதை நாம் எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எந்தத் தாவர உணவிலும் கொலஸ்ட்ரால் கிடையாது.

உலகில் தேங்காய் அதிகமாக விளையும் பகுதிகளிலெல்லாம் மக்கள் அன்றாடம் தேங்காயை உட்கொண்டு இருதயத்திலோ மற்ற உடலுறுப்பிலோ எந்தப் பாதிப்புமின்றி வாழ்ந்து வருகிறார்கள். மற்ற எண்ணெய்களை விற்பனை செய்வதற்காகதேங்காயின் மேல் இம்மாதிரியான உண்மையில்லாத புரளிகளைக் கிளப்புகின்றனர் என்று நான் நினைக்கிறேன். அளவுதான் ஒரு பொருளின் நச்சுத்தன்மையை முடிவு செய்கிறது.

பசுமையான தேங்காயிலிருந்தும், உலர்த்தப்பட்ட தேங்காய்க் கொப்பரையிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெயே தூய தேங்காய் எண்ணையாகும். தேங்காய் எண்ணெய் விமானத்தின் எரிபொருளாக பயன்படும் பயோடீசலுக்கும், மேக்கப் பொருட்கள், க்ரீம் வகைகள், மருந்துகளில், பெயிண்ட் தயாரிப்பில் என பல தொழில்களில் நேரிடையாகவும், வேறுவழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி பயன்படுத்துவதை விட ஏழை மக்களுக்கு உணவாகப் பயன்படுத்துவதே நல்லது என்று நான் நினைக்கிறேன்.

கடைசியாக இளநீரைப் பற்றி ஒரு வார்த்தை: இயற்கையான சதைப் பற்றுள்ள, பாதுகப்பான கொள்கலத்தில் நிரப்பப்பட்டுள்ள இந்த இளநீரில் நமது உடம்பிற்குத் தேவையான உலோகச்சத்துக்களும் வைட்டமின்களும் அதிக அளவில் இருக்கின்றன. இது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல எல்லாப் பருவ காலங்களுக்கும் ஏற்ற மிகச்சிறந்த பானம்.